
சென்னை, ஜூலை 14- தமிழ் திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். 87 வயதான அவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் இன்று மரணம் அடைந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் போன்ற பிரபலமான நடிகர்களுக்கு நாயாகியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்ற சரோஜா தேவி ரசிகர்களால் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என செல்லமாக அழைக்கப்பட்டார்.
1955 ஆம் ஆண்டில் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அவரது திரையுலக வாழ்க்கை தொடங்கியது.
1956 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திருமணம் திரைப்படத்தின் மூலம் தனது 70ஆண்டு கால சினிமாத்துறையில் தமிழ், கன்னடம், தெலுங்கு , மலையாளம், இந்தி உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அவர் முத்திரையை பதித்துள்ளார்.
சரோஜா தேவி நடிகர் எம்.ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு தொடர்ந்து அவருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் தமிழில் கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரையுலகில் தனது சிறந்த நடிப்பிற்காக இந்திய அரசாங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர், பத்ம பூஷன் , பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இதனிடையே நடிப்பு துறையின் சகாப்தமான நடிகை சரோஜாதேவியின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.