
காட்மண்டு, செப் 8- வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்து, சொங்க்லாவில் (Songkhla) நடைபெறவுள்ள SEA விளையாட்டுப் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாக பினாங்கில் முதன் முறையாக வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது 2025 கபடி போட்டி.
USM விளையாட்டு வளாகத்தில் செப்டம்பர் 3 முதல் 6 வரை நடைபெற்ற அந்தப் போட்டியில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசிய ஆகிய 4 தென்கிழக்காசிய நாடுகள் பங்கேற்றன.
அந்தப் போட்டி சீ போட்டிக்கு தயார் நிலையாக மட்டும் அமையவில்லை; மாறாக அனைத்துலகப் போட்டி ஏற்பாட்டுக்கான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் செயலாக்கத்திற்கான ஒத்திகையாக அமைந்ததாக, மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பீட்டர் கோபி கூறினார்.
2027-ல் மலேசியா சீ போட்டியை ஏற்று நடத்தும் போது இந்த கபடியை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவதற்கான பயிற்சியாகவும் அந்தப் போட்டி அமைந்ததாக அவர் சொன்னார்…
மலேசியா இதில் 2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியாளராக தாய்லாந்தும், ஆண்கள் பிரிவில் மலேசியாவும் வாகை சூடின.
போட்டியின் நிறைவு விழாவில் மனிதவள அமைச்சர் Steven Simமின் சிறப்பு அதிகாரி Diccam, தேசிய மற்றும் மாநில விளையாட்டு மன்றப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கபடி விளையாட்டு மேம்பாட்டு நிதியாக மனிதவள அமைச்சர் சார்பில் Diccam RM50,000 ரிங்கிட்டுக்கான காசோலையை பீட்டரிடம் வழங்கினார்.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சுந்தரராஜூ பினாங்கு அரசு சார்பில் RM5,000 வழங்கினார்.
அதே சமயம், சீ போட்டிக்கான தயார்நிலைக்காக GPS Grant மானியத் தொகையாக 55,000 ரிங்கிட்டுக்கான காசோலையையும் சுந்தரராஜூ வழங்கினார்.
போட்டி சிறப்பாக நடைபெற்றிட உதவிய அனைத்துத் தரப்புக்கும் மலேசியக் கபடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ASP அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.