
ஈப்போ, அக்டோபர் 16 –
பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் உஸ்தாஸ் முஹமட் இஸ்மி மாட் தாயிப் (Ustaz Muhammad Ismi Mat Taib) கோரியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் சுமார் 800 பேர் கலந்து கொண்டதோடு பாதுபானங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிகள் ஒழுக்கம், குணநலன் மற்றும் அறிவை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர மதம் மற்றும் கல்வி மதிப்புகளுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருக்க கூடாதென்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் மதுபானம் தொடர்பான எந்தவொரு நிகழ்வுக்கும் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என்றும், இது கல்வி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் சிறப்பு சுற்றறிக்கையின் படி, பள்ளிகள் மதுபானம், சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் அனுமதி வழங்கிய பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.