
ஜோர்ஜ்டவுன், டிசம்பர் 24-பினாங்கில் இந்த கிறிஸ்மஸ் மற்றும் ஆண்டிறுதி விடுமுறையை முன்னிட்டு வாகன நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கிறிஸ்மஸ்க்கு 50% டோல் கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாலும் வாகனப் போக்குவரத்து குறிப்பாக இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது கணக்கின்படி, 2.2 மில்லியன் வாகனங்கள் அம்மாநிலத்துக்குள் நுழையக்கூடும் என, பினாங்கு போலீஸ் தலைவர் Azizee Ismail கூறினார்.
முக்கியமாக பினாங்கு முதல் மற்றும் இரண்டாம் பாலங்கள், ஜூரு, சுங்கை துவா, ஜோர்ஜ்டவுன் நகரப்பகுதி, ஜாலான் ஆயர் ஹீத்தாம், ஜாலான் கிரீன் லேன், மற்றும் பத்து ஃபெரிங்கி வழிகளில் கடும் நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைச் சமாளிக்க ‘Op Lancar’ என்ற சிறப்பு சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
24 மணி நேர கண்காணிப்பு, கூடுதல் போலீஸ் பணியாளர்கள், மாநகர ரோந்துப் படைகள் பணியில் அமர்த்தப்படுவதும் அவற்றிலடங்கும்.
எனவே, பொது மக்கள், மழை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



