
போக்குவரத்து போலீஸ் அதிகாரியை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தங்காக், பிப்ரவரி 24 –
வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 107.1 ஆவது கிலோமீட்டரின் அவசர தடத்தில் போக்குவரத்து போலீஸ் அதிகாரியை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் மணி 2.07 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி வாகனமோட்டி ஒருவரை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தலிப் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயத்திற்குள்ளான தங்காக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கத்துறையின் அதிகாரி சிகிச்சைக்காக மலாக்கா ஜாசின் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்த உள்நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) விதிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



