
கோலாலாம்பூர், ஏப்ரல்-9,
RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னிலிருந்து பழையபடி 2 ரிங்கிட் 05 சென்னுக்கு உயர்த்த, மலேசியாவுக்கு உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
அரசாங்கத்தின் மானியச் செலவுகளைக் குறைக்க இது உதவுமென, உலக வங்கியின் மலேசியாவுக்கான பொருளாதார பிரிவுத் தலைவர் Apurva Sanghi கூறினார்.
இவ்வேளையில், BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் எரிபொருள் கோட்டா அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது ‘சரியான நடவடிக்கையே’ என்றார் அவர்.
என்றாலும், எரிபொருள் மானியம் என்பது இன்னமும் பின்னோக்கிய நடவடிக்கையே…காரணம் மாதாந்திர வரம்பான 200 லிட்டருக்கும் அதிகமாகவே பணக்காரர்கள் எரிபொருளைப் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.
எனவே, மேற்காசிய பதற்ற நிலைக்கு மத்தியில், பெட்ரோல் விலையை மறுசீரமைப்பது, நடப்பிலுள்ள முறைகளுக்கு ஒரு மாற்று நடவடிக்கையாக விளங்கலாம் என Apurva சொன்னார்.
நிலைமை தொடர்ந்து மோசமடையும் பட்சத்தில், விலையில் சிறிய மாற்றங்களைச் செய்து தான் ஆக வேண்டுமென, 2026 ஏப்ரல் வரைக்குமான மலேசியப் பொருளாதார கண்காணிப்பு அறிக்கையின் முதல் கட்ட வெளியீட்டில் அவர் பேசினார்.
தேவையில் சரிவு ஏற்படுவதைத் தடுக்கவே அரசாங்கம் எரிபொருள் விலையை குறைவாகவே நிலைநிறுத்தியுள்ளது.
ஆனால், எத்தனை நாட்களுக்குத் தான் அரசாங்கத்தால் இந்தத் தேவையைப் பாதுகாக்க முடியுமென அவர் கேள்வி எழுப்பினார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 100 டாலரை எட்டியியிருந்தாலும், மானிய விலையிலான RON95 பெட்ரோலை அரசாங்கம் இன்னமும் 1 ரிங்கிட் 99 சென்னிலேயே நிலைநிறுத்தியுள்ளது.
இதனால், கடந்த ஜனவரியில் 700 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த அரசாங்கத்தின் மானியச் செலவுகள் இம்மாதம் 4 பில்லியனுக்கு எகிறியுள்ளன.



