
பாரிஸ், மே 14 – பல மாதங்களாக கடுமையான இணையத் தடையை அமல்படுத்தியிருந்த ஈரான் அரசு, தற்போது குறிப்பிட்ட சில தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கு மட்டும் கட்டண அடிப்படையில் இணைய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரானில் பெரும்பாலான இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
“ப்ரோ இன்டர்நெட்” (“Pro Internet”) எனப்படும் இந்த சேவையின் மூலம் சிலருக்கு மட்டும் இணைய அணுகல் வழங்கப்படுகிறது. இருப்பினும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மற்றும் அனைவருக்கும் சமமாக வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்ப்ளாக்ஸ் (Netblocks), ஈரானின் இணையத் தடை உலகிலேயே நீண்டகால தேசிய அளவிலான இணைய முடக்கங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.



