
கோலாலாம்பூர், ஜூன்-30-நாட்டின் புதிய சீனர் கிராமங்கள் மற்றும் இந்திய கிராமங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, இவ்வாண்டு மொத்தம் 594 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுங்கை சிப்புட் எம்பி எஸ். கேசவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணையமைச்சர் டத்தோ Aiman Athirah Sabu இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள இக்கிராமங்களின் தற்போதைய உள்கட்டமைப்பு நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேசவன் கேள்வி எழுப்பியிருந்தார்.
சாலை மேம்பாடு, வடிகால் அமைப்பு மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மடானி அரசாங்கத்தின் உள்ளடக்கிய கொள்கைக்கு ஏற்ப, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் எந்தவொரு சமூகமும் நாட்டின் தேசிய வளர்ச்சிப் பாதையில் விடுபட்டுவிடக் கூடாது என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது என்றும் துணையமைச்சர் சொன்னார்.



