கெரிக்கில் வாகனமோட்டிகளை பீதியடைச் செய்த யானை

கோலாலம்பூர், ஜூலை.10 – பேராக், கெரிக்கில் யானையொன்று சாலையை மறித்து அங்குமிங்கும் நடந்தது வாகனமோட்டிகளை பீதியடையச் செய்தது. அந்த யானை பல வாகனங்களை நெருங்கியதால் கெரிக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு ஸ்தம்பித்தது. அக்காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஆடி அசைந்து சென்ற அந்த யானை முதலில் ஒரு வெள்ளை நிற வாகனத்தை அணுகுவது தெரிகிறது. அவ்வாகனத்திற்குப் பின்னால், கருப்பு உடை அணிந்த மோட்டார் சைக்கிளோட்டி இருக்கிறார். அவரை நோக்கி யானை மெதுவாக அடிகளை வைத்த போது அந்நபர் சிறிது பின் வாங்குவது அக்காட்சியில் பதிவாகியுள்ளது. மற்றொரு கார் வெள்ளை நிற வாகனத்திற்குப் பின்னால் காத்திருந்தது.
மோட்டார் சைக்கிளோட்டியை நோக்கிச் சென்ற யானை திடீரென சாலையின் மறுபுறத்திற்குச் சென்றது. யானை சற்று விலகியதும், மூன்று வாகனங்களும் விரைவாக அங்கிருந்து சென்று விட்டன. அக்காணொளியைப் பதிவு செய்த பெண் பதற்றமாகி பிரார்த்தனை செய்வதும் கேட்கிறது.
இதனிடையே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அக்காணொளி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பலர் பலவிதமானக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதில் பலர் நிம்மதி தெரிவித்துள்ளனர்.



