
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 — பயணித்துக் கொண்டிருந்த LRT ரயிலின் கதவு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி, பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 6.49 மணியளவில், கெலானா ஜெயா வழித்தடத்தில் கோம்பாக் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக Rapid KL தெரிவித்துள்ளது.
ரயிலின் கதவு ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதனை முழுமையாக மூட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ரயில் Universiti நிலையத்தில் தனது சேவையை நிறுத்தியது. பின்னர், மேலதிக பரிசோதனைக்காக ரயில் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே, கதவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக Rapid KL தெரிவித்துள்ளது.
ஓடும் ரயிலில் கதவு திறந்திருந்த காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றும் Rapid KL உறுதியளித்துள்ளது.



