
“தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தீர்கள். பிரசாரத்தின்போது என்னைப் பற்றி அதிகமாகப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டீர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டீர்களா தம்பி விஜய்?” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மிசா காலம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதும், அப்போது அவர் செய்த சைகையும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் இன்று காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் பதவிக்கென தனி கண்ணியம் இருப்பதாகவும், அந்தப் பொறுப்பின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என விஜயிடம் ஏற்கனவே தாம் நினைவூட்டியதாகவும் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டமன்றம் ரீல்ஸ் எடுக்கும் இடமாகவோ, சினிமா படப்பிடிப்புத் தளமாகவோ மாறக்கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
விஜயின் சட்டமன்றப் பேச்சைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொலி, தமிழ்நாட்டு அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



