
கிள்ளான், ஏப்ரல்-30, சிலாங்கூர் கிள்ளான் துறைமுகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை வடிவமைக்கும் blow moulding இயந்திரத்தில் தலை நசுங்கி வெளிநாட்டுத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை 7.30 மணிக்கு அவ்வியந்திரத்தை அந்நபர் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது இயந்திரத்தினுள்ளே சிக்கிக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலை வெளியில் எடுப்பதற்காக இயந்திரத்தின் கதவுப் பகுதியை அவர் திறந்துள்ளார்.
துரதிஷ்டவசமாக கதவு நகர்ந்து அவரின் தலையை நசுக்கியது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.
புதிதாக வேலைக்குச் சேர்ந்தவரான அத்தொழிலாளிக்கு, தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் துப்புரவுப் பணி கொடுக்கப்பட்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து விசாரணை முடியும் வரை, அப்பகுதியை சீண்டக் கூடாது என தொழிற்சாலை நிர்வாகத்துக்கு, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான JKKP உத்தரவிட்டுள்ளது.
இயந்திர துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான வேலை நடைமுறைகளை தயார் செய்யத் தவறியதற்காக, வேலையை நிறுத்தி வைக்க 2 நோட்டீஸ்களும் வெளியிடப்பட்டுள்ளன.
1994-ஆம் ஆண்டு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.