கோலாலம்பூர், ஜன 30 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனை குறித்த மன்னிப்பு வாரியக் கூட்டம் தொடர்பில் தமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென அவரது வழக்கறிஞர் ஷஃபீ அப்துல்லா தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றதாக கூறப்படுவது குறித்து தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லையென அவர் கூறினார். பேரரசர் சுல்தான் அப்துல்லா தலைமையில் நடைபெறும் கடைசி மன்னிப்பு கூட்டத்தில் நஜிப்பின் சிறைத்தண்டனை குறித்து விவாதிக்கப்படும் என்று நேற்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
நஜிப்பின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்து விவாதிக்க மன்னிப்பு வாரியம் இந்த மாதம் கூடும் என்று ஜனவரி 10ஆம் தேதியன்று சேனல் நியூஸ் ஏசியா (CNA) வெளியிட்டிருந்த அறிக்கையை அப்போது வழக்கறிஞர் ஷஃபீ நிராகரித்தார். மன்னிப்பு வாரியத்தின் அமர்வுகள் மிக ரகசியமாக கருதப்படுவதோடு அதில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் அடையாளங்கள் மற்றும் கூட்டங்களின் தேதிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.