
கோலாலாம்பூர், மார்ச்-9-கோலாலாம்பூர் மாநகர் மன்றமான DBKL-லின் ஆலோசக வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி மற்றும் அனுபவ அடிப்படையில் அவ்வாரியத்தில் அமர வைக்க, ஓர் இந்திய அதிகாரி கூடவா மடானி அரசாங்கத்தின் கண்களுக்குத் தெரியவில்லை என அவர் தனது முகநூலில் அவர் கேட்டார்.
அதற்கு ஆதாரமாக DBKL ஆலோசக வாரிய உறுப்பினர்களின் படங்களுடன் கூடிய முழு பட்டியலையும் அவர் இணைத்துள்ளார்.
15-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்/ மடானி அரசுக்கே இந்திய வாக்காளர்களின் 90 விழுக்காட்டு ஆதரவு சென்றதையும் இந்த நேரத்தில் அவர் சுட்டிக் காட்டினார்.
_“இது மதம் அல்லது இனத்தைப் பற்றியது அல்ல, சமூக பிரதிநிதித்துவம் பற்றியதாகும்; மாநகரில் கோயில்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன; இவற்றை யார் கவனித்து தீர்வு காண்பார்கள் என்ற கேள்வி எழுகிறது”_ என்றார் அவர்.
இது சமூகத்தில் கவலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட சிவராஜ், அரசாங்கம் நியாயமாகவும் நடைமுறையாகவும் அணுக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் இப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.



