Latestமலேசியா

HAWANA 2025: செய்தி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தின் பின்னணியில் உள்ள முகங்களை நேரில் சந்திக்கும் தருணம்

கோலாலம்பூர், ஜூன் 14 – 2025-ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர் தினமான HAWANA என்பது வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வாக மட்டும் இல்லாமல், ஊடக உலகத்துக்கும் பொது மக்களுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பாகவும் மாறியது.

இக்கொண்டாட்டம் WTCKL மற்றும் Sunway Putra Mall-லில் வார இறுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

உச்சக்கட்ட நிகழ்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முக்கிய அறிவிப்பாக, நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை செயல்படுத்துவதற்காக, 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டையும் பிரதமர் அறிவித்தார்.

நாட்டின் ஊடக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வேளையில், உள்ளூர் ஊடகவியலாளர்களின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஏர் ஆசியா நிறுவனம், one-off அதாவது ஒரேயொரு முறை வழங்கப்படும் சலுகையாக, ஆசியான் வட்டாரத்தில் உள்ள 57 இடங்களில் ஒன்றுக்கு சென்று வர 50 விழுக்காடு டிக்கெட் கழிவை வழங்குகிறது.

தான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் அவர்களுடனான வியூக ஒத்துழைப்பின் வாயிலாக இச்சலுகை சாத்தியமானதாக, தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.

துணையமைச்சர் தியோ நீ ச்சிங், பெர்னாமா தலைமை செய்தியாசிரியரும் இந்த HAWANA 2025 ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான அருள் ராஜூ துரை ராஜ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களிலிருந்து வந்த 1,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு நிகழ்வை இன்னும் வண்ணமயமாக்கினர்.

முக்கியமாக, நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலோர் தினசரி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடகம் மற்றும் இணையதள ஊடகங்களை ஆர்வமாக பின்தொடர்கின்ற செய்திப் பிரியர்களே.

அவர்கள் நேரில் செய்தியாளர்களை சந்தித்து, கேள்விகள் எழுப்பி, ஊடகத்தின் பின்னணியில் நடக்கும் செயல்முறைகளைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றனர்.

சிலருக்கு இது தங்களது ‘செய்தி முன்மாதிரிகளை’ நேரில் சந்திக்கும் ஒரு கனவுபோன்ற தருணமாக இருந்தது.

HAWANA 2025 நிகழ்வு, மலேசியா 2025-ஆம் ஆண்டு ஆசியான் தலைமை வகிக்கின்ற சூழ்நிலையிலும், நாடுகளுக்கிடையிலான ஊடக வியூக ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் இடமாகவும் அமைந்தது.

அனைத்துலக உரையாடல்கள், எல்லை தாண்டிய செய்தி பணிக்கான பயிற்சிகள், ஊடக ஒத்துழைப்பு குறித்து பல கருத்தரங்குகள் நடைபெற்றன.

அவற்றில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, தவறான செய்திகளை கட்டுப்படுத்தல் மற்றும் இளைஞர் பத்திரிகையாளர்களின் வளர்ச்சி போன்ற முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன.

பள்ளி மாணவர்கள், ஊடக துறையை தேர்ந்தெடுத்த மாணவர்கள் மற்றும் புதிய பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது HAWANA-வை அனுபவமுள்ளவர்களுக்கான நிகழ்வாக மட்டும் அல்லாமல், ஊடக துறையின் புதிய தலைமுறைக்கும் வழிகாட்டும் நிகழ்வாக மாற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!