
செப்பாங், ஜூலை-7 – நாட்டின் நுழைவாயிலான KLIA விமான நிலையத்தில், சட்டவிரோத வாகனச் சேவை மற்றும் ‘ulat’ எனப்படும் இடைத்தரகர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இனி, KLIA முனையம் 1 மற்றும் 2-ல் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
இதுவரை நள்ளிரவு வரை மட்டுமே இருந்த கண்காணிப்பு முறை, இப்போது 3 சுழற்சி முறை பணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் சுற்றுப் பயணிகளை அணுகி, மிக அதிகக் கட்டணத்தை வசூலிக்கும் இடைத்தரகர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம்.
அண்மையில், அங்கு உரிய அனுமதியின்றி இயங்கிய 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பயணிகளிடம் மிரட்டி அல்லது ஏமாற்றி ஆயிரக்கணக்கான ரிங்கிட்களை வசூலிக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள், Visit Malaysia 2026 சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரரக் காலத்தில் நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதாக அதிகாரிகள் எச்சரித்துளௌளனர்.
சுற்றுப் பயணிகளும் அதிகாரப்பூர்வ போக்குவரத்து முகப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத வாகனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



