
சிப்பாங், மே 16- நேற்று, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் நெடுஞ்சாலையில் (LDP), ஓடிக் கொண்டிருந்த காரின் கூரை மீது ஏறி நின்று, ஆபத்தான சாகசத்தைச் செய்த இரண்டு வெளிநாட்டு ஆடவர்களின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
ஆபத்தான இச்செயலைச் செய்த அவ்விருவரும் ஒருவழியாக அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் (Norhizam Bahaman) தெரிவித்துள்ளார்.
ஆரம்ப விசாரணையில், அவ்விருவரும் வாகனத்தில் இருந்த பயணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாகனம் நகரும் போது, ஜன்னல் வழியாக வெளியே குதித்து, கூரையின் மீது ஏறி, அதே ஜன்னல் வழியாக மீண்டும் காரில் நுழைந்த அவர்களின் செயல், கண்டிக்கத்தக்கது என்று நோர்ஹிசாம் கூறினார். ஆனால், அவர்களின் அச்செயலுக்கும், வாகன ஓட்டுனராலி எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களின் இக்குற்றம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதோடு தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல் துறையினரைத் தொடர்புக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.