செகாமாட், ஜனவரி-7 – ஜோகூர் செகாமாட்டைச் சேர்ந்த 41 வயது மாது Love Scam எனும் காதல் மோசடியில் சிக்கி 200,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விமானப் பணியாளர் எனக் கூறிக்கொண்ட ஆடவருடன் கடந்த மாதம் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் ஆடம்பர பரிசு வழங்கும் அளவுக்கு இருவரின் காதல் வலுவாகியது.
ரொக்கம், நகைகள், கைப்பேசி, காலணி என அவ்வாடவர் பரிசுகளை அடுக்கியதால் அம்மாது பூரித்துப் போனார்.
ஆனால் அங்கு தான் ‘ஆபத்து காத்திருக்கின்றது என்பதை அவர் அறியவில்லை.
சில வாரங்கள் கழித்து வெளிநாட்டுக் காதலன் அனுப்பிய பரிசுப் பொட்டலங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் ஒருவர் தொடர்புகொண்டு கூறிய போதும் அம்மாதுவுக்கு சந்தேகம் வரவில்லை.
கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 48 தடவையாக 217, 080 ரிங்கிட் பணத்தை அவர் மாற்றியுள்ளார்.
ஆனால் ‘காதலன்’ கூறிய பரிசுகள் வந்து சேராத போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலீஸில் புகார் செய்தார்.