
கோலாலம்பூர், மே-3 – ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில், பெண்ணொருவர் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து அவரைக் காணவில்லை என புகார் கிடைத்திருப்பதை, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா உறுதிப்படுத்தினார்.
ஏற்கனவே சில முறை MACC-யிடம் வாக்குமூலம் அளித்துள்ள 42 வயது அப்பெண், ஏப்ரல் 9-ஆம் தேதி வராமல் போனதை MACC-யும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, MACC அதிகாரிகள், காணாமல் போன பெண்ணின் வழக்கறிஞர் உள்ளிட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் துணையோடு அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக, டத்தோ ருஸ்டி கூறினார்.
பமீலா லிங் என அடையாளம் கூறப்பட்ட அப்பெண், சம்பவத்தன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது வீட்டிலிருந்து, e-hailing காரில் புத்ராஜெயா MACC தலைமையகம் கிளம்பியுள்ளார்.
எனினும் அவரை வழிமறித்து தங்களை ‘MACC அதிகாரிகள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் மூவர், அப்பெண்ணைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் செய்தி ஊடகமொன்று முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தது.