
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர், பூசாட் பண்டார் உத்தாராவில் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கையில், 1,435 வெளிநாட்டவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்களில் 1,222 பேர் மியன்மாட் நாட்டவர்கள், 142 பேர் வங்காளதேசிகள், 9 பேர் இந்தியர்கள், நால்வர் இந்தோனேசியர்கள், ஒருவர் நேப்பாளி.
பெரும்பாலோர் UNHCR ஐநா அகதிகளுக்கான அட்டை வைத்திருந்தனர்.
Op Kachi என்ற பெயரில், உருமறைப்பு சீருடைகளுடன் ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான போலீஸார் அச்சோதனையில் களமிறங்கினர்.
PGA எனப்படும் பொது தற்காப்புப் படை, FRU கலகத் தடுப்பு போலீஸார், போக்குவரத்து அமுலாக்கப் புலனாய்வுத் துறை, குடிநுழைவுத் துறை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL உள்ளிட்ட அரசு நிறுவனங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 560 பேர் அதில் பங்கேற்றனர்.
கோலாலம்பூர் பசார் போரோங் சந்தைக்கு அருகேயுள்ள கடை வீடுகள் மற்றும் வணிகத் தளங்களுக்கு நுழையும் பாதைகளை முழுமையாக முற்றுகையிட்டு அச்சோதனை நடத்தப்பட்டது.
வெளிநாட்டினர் குறிப்பாக மியன்மார் நாட்டு அகதிகள் அங்கு நிரம்பி வழிவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேசியப் போலீஸ் படைத் தலைவரின் உத்தரவுக்கு ஏற்ப அச்சோதனை நடத்தப்பட்டது.
குடிநுழைவு விதிமீறல் மற்றும் வணிக -விபாரம் சம்பந்தப்பட்ட சிறு சிறு குற்றங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதை அது நோக்கமாகக் கொண்டிருந்தது.
அவ்வகையில் பெரும்பாலான இந்த வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வருவது கண்டறியப்பட்டது.