
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-1 – பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தி வரும் “Player Knockout Battle” அல்லது “PK Battle” என்ற ஒரு வகை விளையாட்டு குறித்து விளக்கமளிக்க, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, டிக் டோக்கை அழைக்கவிருக்கிறது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
இந்த _trend_களின் போக்குகளின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் மிகவும் இளமையாக உள்ளனர் என்றார் அவர்.
டிக் டோக் சமூக ஊடக உரிமம் பெற்ற தளம் என்பதால், அவர்கள் முன்வந்து, நிலைமையை விளக்கி, இந்த விஷயத்தைக் களைவதற்கான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும்.
இந்த வாரத்திலேயே அச்சந்திப்பு நடைபெறலாமென ஃபாஹ்மி கோடி காட்டினார்.
PK Battle என்பது டிக் டோக்கில் ஒரு நேரடி ஒளிபரப்பு அம்சமாகும்; அங்கு 2 பயனர்கள் பார்வையாளர்களிடமிருந்து மெய்நிகர் பரிசுகளைப் பெறுவதற்காக நிகழ்நேரத்தில் போட்டியிடுவார்கள்; பின்னர் அவை பண வெகுமதிகளாக மாற்றப்படுகின்றன.
குழந்தைகள் பிரபலமடைவதற்காக, இந்தப் பரிசுகளை வாங்க பணத்தை, சில சமயங்களில் அவர்களின் பெற்றோரின் பணத்தைக் கூட தவறாகப் பயன்படுத்துகின்றனர்; இந்தப் போக்கானது, இணைய சூதாட்டத்தின் ஒரு வடிவமாக மாறிவிட்டது என விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இந்த PK Battles-களுக்கு பரிசுகளை வாங்குவதற்காக குழந்தைகள் செலவிடும் பணம் குறித்த பெற்றோரின் கவலைகள் பத்திரிகைகளில் வெளியானதையும் ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக் டோக், இன்ஸ்டகிராம் அல்லது பிற சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்கக்கூடாது என அரசாங்கம், குறிப்பாக தொடர்பு அமைச்சு கடுமையாக வாதிடுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றென அவர் சொன்னார்.