
கோலாலம்பூர், டிச – இன்று காலையில் ஜாலான் டத்தோ செனுவில் PPR Sentul Murni அடுக்ககத்திலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 82 வயதுடைய தாயும் 58 வயதுடைய மகனும் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் இருவரும் கழிவறையில் இறந்த கிடந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
காலை மணி 7.18 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து செந்துல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.
தீயை அணைக்கவும், சுற்றியுள்ள பகுதிக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தவும் இயந்திர பம்பிலிருந்து ஆறு நீர்க் குழாய்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீக்குள்ளான வீடு 40 விழுக்காடு பாதிக்கப்பட்டதோடு இன்று காலை மணி 8.27 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இத்தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



