Songkran கொண்டாட்டம்: பன்முகக் கலாச்சாரமே மலேசியாவின் வலிமை -ஒருமைப்பாட்டு அமைச்சர்

கங்கார், ஏப்ரல்-14-மலேசியாவில் இன ஒற்றுமை மற்றும் காலாச்சார பன்முகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், தேசிய அளவிலான Songkran விழா கொண்டாடப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், பெர்லிஸ், கங்காரில் இந்த விழாவை திறந்து வைத்து உரையாற்றினார்.
Songkran விழா மலேசிய சயாமிய சமூகத்தின் முக்கிய பண்பாட்டு மரபு என அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற பாரம்பரியங்கள், நாட்டின் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படுகின்றன.
இது மலேசியாவின் பன்முகத்தன்மையே அதன் வலிமை என்பதை வெளிப்படுத்துகிறது.
மேலும், சயாம் சமூகத்தின் வரலாறு மற்றும் பங்களிப்பு குறித்து மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2023 முதல் 2025 வரை, சயாம் சமூகத்தின் கல்வி, மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க RM2 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து இனங்களின் பண்பாட்டு மரபுகளையும் பாதுகாப்பது, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த Songkran விழாவில், பாடாங் பெசாரைச் சேர்ந்த Jauwadee Bun Chea என்பவர், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய Songkran அழகியாக மகுடம் சூடினார்.



