
ஜோர்ஜ்டவுன், ஜூன்-3 – RSN ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஜூன் 1-ஆம் தேதி முதன் முறையாக கல்வித் திருவிழா எனும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது.
2024 SPM தேர்வில் மிகச் சிறந்தத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இரட்டை விழாவாகவும் அது அமைந்தது.
பினாங்கு கொம்ப்ளெக்ஸ் மஷ்யாராக்காட் பெஞ்சாயாங்கில் நடைபெற்ற இவ்விழாவை மாநில முதல்வர் Chow Kon Yeow அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அறப்பணி வாரியத்தின் தலைவர் ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
SPM தேர்வில் குறைந்தது 7A பெற்ற 167 இந்திய மாணவர்களுக்கு, ஒரு A-க்கு 50 ரிங்கிட் வீதம் மொத்தமாக 70,200 ரிங்கிட் ரொக்கம் சன்மானமாக வழங்கப்பட்டது.
அதோடு, மாநில முதல்வர் கையெழுத்திட்ட சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
முத்தாய்ப்பாக, 2024 SPM தேர்வின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த மாணவியாக தர்ஷினி சுபாஸ் சன் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோப்பையும், நவீன மடிக்கணினியும் வழங்கப்பட்டன.
மாநில இந்து மாணவர்களின் கல்விச் சாதனையை அறப்பணியம் அங்கீகரிப்பது தொடர்ச்சியாக இது இரண்டாவது ஆண்டாகும்.
இதனிடையே, 2023 முதல் 2025 மே வரை கல்வி மற்றும் சமுக நல உதவியாக சுமார் 1 மில்லியன் ரிங்கிட் வரை அறப்பணி வாரியம் செலவிட்டுள்ளது.
இதன் வழி மாநிலத்தில் உள்ள 1,028 இந்து மாணவர்கள் பயன் பெற்றிருப்பதாக, செனட்டர் லிங்கேஷ்வரன் கூறினார்.
தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தலைவிதியை மாற்றுவதற்கு கல்வியே திறவுகோல் என திடமாக நம்புவதால், இது போன்ற நடவடிக்கைகளை அறப்பணி வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருமென்றார் அவர்.