Latestமலேசியா

SST வரி விரிவாக்கத்தில் வழிபாட்டுத்தலங்களுக்கும் விலக்கு வேண்டும் – டத்தோ சிவகுமார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன்-19 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் விரிவாக்கம் காணும் நிலையில், முக்கிய அம்சங்களில் ஒன்றான வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.

வழிபாட்டுத் தலங்களையும் பொது வசதிக் கட்டமைப்பாகக் கருதி, SST வரி விதிப்பிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

SST விரிவாக்கம் கண்டாலும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்து விலக்களிக்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது பாராட்டுக்குரியது.

என்றாலும் கட்டுமானம் உள்ளிட்ட 6 புதியச் சேவைத் துறைகளுக்கு வரி விரிவாக்கப்பட்டுள்ளது.

அதாவது, கட்டுமானக் குத்தகைக்காரர்களின் வருவாய் ஆண்டுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட்டை எட்டும் பட்சத்தில் அவர்களுக்கு 6 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

இதனால் ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானங்களும் நேரடி பாதிப்பை எதிர்நோக்கும்.

சிறு மற்றும் நடுத்தர குத்தகைக்காரர்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் உயரிய வரம்பை நிர்ணயித்து, குடியிருப்புகள், பொது வசதி கட்டமைப்புகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளது.

ஆனால் அப்பட்டியலில் வழிபாட்டுத் தலங்கள் சேர்க்கப்படவில்லை.

வழிபாட்டுத் தலங்கள் என்பது வெறும் ஆன்மீக இடங்கள் அல்ல; மாறாக மக்களின் ஒற்றுமை மற்றும் நலன் மற்றும் சமூக நல்வாழ்வு மையங்களாகும்.

எனவே குடியிருப்புகளுக்கு வரி விலக்கு தரும் அரசாங்கம் வழிபட்டுத் தலங்களுக்கும் அதனை வழங்குவதே சரியாக இருக்கும்.

இக்கோரிக்கையை நன்கு பரிசீலித்து அரசாங்கம் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டுமென அறிக்கை வாயிலாக டத்தோ சிவகுமார் கேட்டுக் கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!