
புத்ராஜெயா, ஜூன்-16 – சட்டம் 118 என்றழைக்கப்படும் வீட்டுடைமை மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் விற்கப்படும் குடியிருப்பு சொத்துக்கள் விற்பனை மற்றும் சேவை வரியான SST-டியிலிருந்து விலக்குப் பெறுகின்றன.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அதனை அறிவித்துள்ளார்.
நில உரிமை அல்லது சொத்தின் பயன்பாட்டு நோக்கத்தை பொருத்து SST விலக்கு தீர்மானிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
அதாவது, சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து குடியிருப்பு கட்டடங்களும், அவை குடியிருப்பு பயன்பாட்டிற்காகவும் சட்டம் 118-டின் வரம்பிற்குள்ளும் இருக்கும் வரையிலும், SST வரியிலிருந்து அவை விலக்குப் பெறும் என்றார் அவர்.
புதுப்பிக்கப்பட்ட SST வரி விதிப்பு பற்றி கவலைகளை வெளிப்படுத்தும் தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துகள் தொடர்பில், இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசானுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து ங்கா கோர் மிங் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
சேவை வரி ஒரு மட்டத்தில் மட்டுமே விதிக்கப்படுவதை உறுதிச் செய்ய, அடுக்கு வரிகளின் பிரச்னை வணிகத்திலிருந்து வணிகத்திற்கு அல்லது B2B விலக்கு மூலம் தீர்க்கப்பட்டது என்றார் அவர்.
நிதியமைச்சின் அறிவிப்பின் படி, சிமெண்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் தொடர்ந்து 0% விற்பனை வரிக்கு உட்படும்.
கட்டுமானப் பொருட்களுக்குப் பொருந்தும் 400 கட்டணக் குறியீடுகளில், வாட்கள் (vats), லேமினேட் கண்ணாடி மற்றும் வலை போன்ற 8 பொருட்களுக்கு மட்டுமே விற்பனை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது மொத்த கட்டடப் பொருட்களின் கட்டணக் குறியீடுகளில் 2% மட்டுமே பாதிக்கும்.
எனவே, குத்தகைக்காரர்கள் சேவை கட்டணங்களிலிருந்து பொருள் செலவுகளைப் பிரிக்கத் தேர்வுசெய்யலாம், இதனால் சேவை வரி கட்டுமான சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும் என அமைச்சு சுட்டிக் காட்டியிருந்தது.