
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – நேற்று இரவு, மலேசியாவின் முன்னாள் தேசிய ஹொக்கி அணித் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சர்ஜிட் சிங், தனது 63ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், செராஸ், கோலாலம்பூரிலுள்ள HCTM மருத்துவமனையில் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவை மலேசிய ஹொக்கி கூட்டமைப்பான MHC உறுதிப்படுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
1982 முதல் 1993 வரை தேசிய அணிக்காக விளையாடிய சர்ஜிட் சிங், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், 1982 புதுடெல்லி மற்றும் 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா வென்ற வெண்கலப் பதக்க அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.
ஹொக்கி வீரராக ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராகத் தொடர்ந்து சேவையாற்றிய அவர், தேசிய அணிக்கு 2007 முதல் 2008 வரை தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் மார்ச் 2024 முதல் மார்ச் 2026 வரை மீண்டும் தேசிய அணியான ‘ஸ்பீடி டைகர்ஸ்’ அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
மலேசிய ஹொக்கிக்கு வீரராகவும் பயிற்சியாளராகவும் சர்ஜித் சிங் ஆற்றிய அர்ப்பணிப்பு, சேவை மற்றும் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என MHC தெரிவித்துள்ளது.



