
கோலாலம்பூர், மே 8- கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, டத்தின் ஸ்ரீ பமீலா லிங் யூ கடத்தப்பட்ட நாளில், புத்ராஜெயா பகுதியைச் சுற்றி, எந்தவொரு காவல் துறையினரின் நடவடிக்கைகளோ சோதனைகளோ பதிவு செய்யப்படவில்லை என்பதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம், போலீசார், பமீலா லிங்கைக் கடத்தியதாகக் கண்டறியப்பட்ட மூன்று சந்தேக நபர்களில், இருவர் காவல்துறை சீருடைகளை அணிந்திருந்தனர் என்ற கூற்றை மறுக்கின்றனர். மேலும் அச்சந்தேக நபர்கள், காவல் துறையினரைப் போன்று வேடமிட்டு, கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து, 5 வெவ்வேறு வாகனங்களில் வந்த அனைத்து சந்தேக நபர்களும் புத்ராஜெயாவை விட்டு 2 வெவ்வேறு பாதைகள் வழியாக தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இக்கடத்தல் தொடர்பான விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதோடு, சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறியுள்ளார்.