
கோலாலம்பூர், ஏப்ரல்-18, பிறை இல்லாத முழுமையற்ற தேசியக் கொடியை கார்டூனாக முதல் பக்கத்தில் வெளியிட்ட 2 சீன நாளேடுகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தேசிய இறையாண்மையை உட்படுத்திய அத்தவறுகளை அனுசரித்து போக முடியாது என, DSK எனப்படும் மலேசிய சீனார் காசே டைனமிக் நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
அதுவும், சீன அதிபர் சீ சின் பிங்கின் மலேசிய வருகையின் போது அத்தவறு நடந்திருப்பது, நாட்டின் நற்பெயரைப் பாதித்துள்ளது என்றார் அவர்.
தேசியக் கொடியானது, இறையாண்மை மிக்க சுதந்திர நாட்டின் உன்னத அடையாளமாகும்.
இப்படியிருக்க, அதனைத் தவறாக சித்தரிப்பது, அதுவும் சொந்த நாட்டினரே அத்தவற்றைச் செய்வது பெருத்த அவமானமாகும்.
இது நிச்சயம் பொது மக்களின் சினத்தைத் தூண்டத்தான் செய்யுமென, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் சொன்னார்.
எனவே, நடந்த தவறு சட்ட மீறல் என்பதால், உரிய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
என்னதான் தேசிய நீரோட்ட பத்திரிகைகளாக இருந்தாலும், அவர்கள் நடவடிக்கையிலிருந்த தப்ப முடியாது; தப்பக் கூடாது.
சட்ட அமுலாக்கத்தில் இரட்டை நிலைப்பாடு என ஒன்றில்லை என டத்தோ சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
பிறையில்லாத ஜாலூர் கெமிலாங் படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள Sin Chew Daily மற்றும் Kwong Wah Yit Poh சீன நாளேடுகள், போலீஸ் விசாரணைக்கும், மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC—யின் விசாரணைக்கும் ஆளாகியிருக்கின்றன.
மாமன்னர், பிரதமர் முதற்கொண்டு அத்தவற்றைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது