கோத்தா கினபாலு, நவ 6 – பிறந்து ஆறே நாளான பெண் சிசு ஒன்று கோத்தா கினபாலுஜாலான் மக்தாப் காயாவுக்கு அருகேயுள்ள பள்ளிவாசலுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. முழு வளர்ச்சியுடன் நல்ல நிலையில் காணப்பட்ட அந்த சிசு பள்ளிவாசலுக்கு முன்புறம் ஒரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததை அந்த பள்ளிவாசலின் இமாம் கண்டார் என கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஸைடி அப்துல்லா தெரிவித்தார்.
அந்த குழந்தை அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தது என்பதோடு அதனை பாரமரிப்பதற்கான வசதியில்லை. எனவே மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற குறிப்பும் அக்குழந்தை வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிக்குள் இருந்ததாக அவர் கூறினார். மேலும் அக்குழந்தையை ஆதரவற்ற இல்லத்தில் சேர்த்துவிடும்படியும் அந்த குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே 12 வயதுக்கும் குறைந்த குழந்தையை பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் கைவிடுவது குற்றம் என்பதால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக முகமட் ஸைடி தெரிவித்தார்.