
புத்ராஜெயா, ஏப்ரல்-22, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, ஊழலைத் துடைத்தொழிப்போம் என உறுதிமொழி ஏற்றிருக்கிறது.
புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சில் அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி முன்னிலையில் கெசுமா பல்நோக்கு மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்து.
ஊழலுக்கு எதிரான HRD Corp-பின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாட்டையும், வெளிப்படையான, பொறுப்புணர்வு மற்றும் நெறிமுறை பணி கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இந்நிகழ்வு வெளிக்காட்டுவதாக, HRD Cop-பின் தலைவர் அபு ஹுராய்ரா அபு யாசிட் கூறினார்.
நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் அரசாங்க உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்றுவது மீதான தங்களின் கடப்பாட்டையும் இது பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.
தவிர அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்துவோம் என்றார் அவர்.
நெறிமுறையை ஊக்குவிக்கும் வேலைச் சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, அதனையே எங்களின் அமைப்பின் அடிப்படை அம்சமாக கொள்வோம் என அவர் கூறினார்.
இந்த உறுதிமொழி ஏற்றலை, அபு ஹுராயா தலைமையில், இயக்குநர் வாரிய உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், HRD Corp துறை பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பின்பற்றினர்.
இவ்வேளையில், மலாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட HRD Corp நெறிமுறை வழிகாட்டி புத்தகமும், அசாம் பாக்கியிடம் வழங்கப்பட்டது.
ஊழல் துடைத்தொழிப்புக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியில், நல்ல பண்புகளை விதைக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக அந்த வழிகாட்டி புத்தகம் HRD Corp பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும்