பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 30 – புறாக்களுக்கு உணவளிப்பவர்கள் அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அபராதம் விதிக்கப்படும் என பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது.
புறாக்களால் ஏற்படும் தொல்லை குறித்து இவ்வாண்டு பொதுமக்களிடமிருந்து 14 புகார்கள் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புறாக்கள் அல்லது இதர காட்டுப் பறவைகளுக்கு உணவளித்து பிடிப்பட்டவர்களுக்கு, வாய்மொழியாக எச்சரிக்கைகளும், அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளதை, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைவர் அஸ்னான் ஹசான் சுட்டிக்காட்டினார்.
அதனால், அந்த தடை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதோடு, இணையம் வாயிலாக அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளதாக அஸ்னான் சொன்னார்.
தனியார் அல்லது பொதுச் சொத்துகளை அசுத்தப்படும் முறையில் யாரும் நடந்து கொள்ள கூடாது.
புறாக்கள் அல்லது காட்டுப் பறவைகளின் எச்சம், பூஞ்சைகளை உருவாக்கி, மனிதர்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தும்.
தூசி மக்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் வித்திடும் என்பதால், புறாக்களுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு அஸ்னான் வலியுறுத்தினார்.