சுங்கை சிப்புட், டிச 15 – குட்டையில் விரால் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் திடீரென புலியை கண்டு ஓட்டம் பிடித்தார். தமது மனைவி அண்மையில்தான் பிரசவம் முடிந்ததால் அவருக்காக சமைப்பதற்காக விரால் மீன் பிடிப்பதற்காக பிற்பகல் 1.40 மணியளவில் Taman Dovenby Phase 2ஆவது திட்டத்தில் உள்ள குட்டைக்கு சென்றபோது புலியை நேருக்கு நேர் சந்திக்கும் பயங்கர அனுபவத்தை பெற்றதாக 22 வயதுடைய முஹம்மது லுக்மான் ஹக்கீம் கூறினார்.
அந்த குட்டைக்கு அருகே மிருகத்தின் வாடை வந்ததால், அருகே ஆடுகள் இருப்பதால் அது குறித்து முதலில் தாம் பெரிதுபடுத்தவில்லையென அவர் தெரிவித்தார். உண்மையில் ஹக்கீமி என்ற நண்பரும் என்னுடன் மீன் பிடிக்க வந்திருக்க வேண்டும். ஆனால், திடீரென அவர் வரவில்லை.
திடீரென புலி அங்கு தோன்றியது கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்த புலி உறுமிக்கொண்டே என்னை பார்த்தது. நானும் நேருக்கு நேர் அதன் கண்களை பார்த்தேன்.
அப்போது Al-Quran வசனங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். மெதுவாக பின்னால் 10 மீட்டர் தூரம் நடந்து திரும்பிக் பார்க்காமல் ஓடியதாக அவர் கூறினார். அருகேயுள்ள கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சிலரிடம் உதவி கேட்டேன். நான் தப்பியோடியபோது புலி என்னை துரத்தியதா என்று தெரியவில்லை. கோயிலில் இருந்த நபர்கள் புலியை நான் பார்த்ததாக கூறியதை நம்பவில்லை.
புலி உறுமும் சத்தத்தை கேட்டபின்னர் தான் அவர்களும் புலி இருப்பதை நம்பினர். அப்போது குரங்குகளும் கூச்சலிடுவதும் மரத்திற்கு மரம் தாவும் சத்தமும் கேட்டது. அதன் பிறகு அங்கிருந்து என் நண்பர் வீட்டிற்கு ஓடிச்சென்று இது குறித்து வனவிலங்கு பூங்காதுறைக்கு புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டதாக லுக்மான் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தங்களுக்கு பிற்பகல் மணி 2.12 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதாக சுங்கை சிப்புட் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் முகமது ஜமாலுதீன் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரரர்களையும் அங்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் புலியை பார்க்கவில்லை. இது குறித்து வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பேரா வனவிலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் யூசப் ஷெரீப் கூறினார்.