
சிந்தோக், ஜூன்-10 – UPSI மாணவர்களை உட்படுத்திய கெரிக் பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனவேதனையை புரிந்துநடந்துகொள்ளுமாறு, வலைத்தளவாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அந்த நினைவூட்டலை விடுத்துள்ளார்.
15 மாணவர்களை பலிகொண்ட அக்கோர விபத்து குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு உள்ளகடங்கள் வலம் வருகின்றன; ஆனால், எது எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை காயப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றார் அவர்.
ஏற்புடையதாக இல்லாத ஒரு வீடியோ வைரலாகி வருவதையும் அமைச்சர் உதாரணம் காட்டினார்;
யாரோ ஒருவர் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, நொறுங்கி போன பேருந்தின் உள்ளிருந்து வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.
பெற்றோர்கள் தங்களின் அன்புக்குரியப் பிள்ளைகளை இழந்து வாடும் இந்நேரத்தில், இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது எந்தளவுக்கு ‘நாகரீகமான’ செயல் என தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
பெரும்பாலானா வீடியோக்கள் அனுதாபம் தெரிவிக்கும் நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன என்றாலும், அது போன்ற உள்ளடக்கங்கள் குறித்து மேலதிக கவனம் தேவை; பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலிருந்து பார்த்தால் தான் அவர்களின் மனவேதனையும் வலியும் நமக்கும் புரியுமென அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில் இத்துயரச் சம்பவம் குறித்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் அவர் சொன்னார்.
கெடா, வட மலேசிய பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பில் இன்று முக்கிய உரை நிகழ்த்திய பின்னர் ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று விடியற்காலை பேராக், கெரிக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் UPSI பல்கலைகழக மாணவர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.