கோலாலம்பூர், ஜன 31 – மலேசியாவின் 17-வது புதிய மாமன்னராக ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இன்று பதவியேற்றார்.
கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா, பாலிருங் செரி, சிங்காசன மண்டபத்தில் 264 ஆவது சிறப்பு ஆட்சியாளர்கள் மன்றத்தினர் முன்னிலையில் 65 வயது சுல்தான் இப்ராஹிம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்று உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், சுல்தான் இப்ராஹிமின் துணைவியார் ராஜா ஸரித் சோபியா சுல்தான் இட்ரிஸ் நாட்டின் பேரரசியாக அரியணை ஏறினார்.
இச்சடங்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு துணை மாமன்னராக மேன்மைத் தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
மாமன்னரின் பதவி உறுதி மொழிக்கான உள்ளடக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாசிக்க, மலாய் ஆட்சியாளர்கள், அரச பேராளர்கள் மற்றும் சிறப்பு பிரமுகர்கள் முன்னிலையில் பதவி உறுதிமொழி பிரகடன கடிதத்தில் சுல்தான் இப்ராஹிம் கையெழுத்திட்டார்.