ஒரு தடவை நுழைந்தால் 20 வெள்ளியா? Jalan TAR-ரில் அதிகக் கட்டணம் வசூலித்த 4 கார் நிறுத்துமிடங்கள் சிக்கின
கோலாலம்பூர், ஏப்ரல்-1, இந்த விழாக்காலத்தில் கார் நிறுத்துமிடங்களில் 20 ரிங்கிட் வரை அநியாயத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது கோலாலம்பூர் Jalan Tuanku Abdul Rahman-னில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு மடங்கு அதிக விலையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இணையத்தில் தகவல் வைரலானதை அடுத்து, ஞாயிறன்று 4 கார் நிறுத்துமிடங்களில் அமுலாக்க அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டதாக, உள்நாட்டு வாணிபம் – வாழ்க்கைச் செலவின அமைச்சின் கோலாலம்பூர் கிளை KPDN KL கூறியது.
அந்த அநியாய விலை குறித்து பொது மக்களிடம் இருந்தும் புகார்கள் வந்தன.
அச்சோதனையின் போது, அறிவிப்புப் பலகையில் பழைய விலையின் மீது திடீரென புதிய விலை ஒட்டப்பட்டிருப்பது அம்பலமானது.
அதாவது அந்த 4 கார் நிறுத்துமிடங்களிலும் நுழையும் ஒவ்வொரு காருக்கும் தற்போது 20 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதே கடந்தாண்டு ஹரி ராயா சமயத்தில் அக்கட்டணம் 15 ரிங்கிட்டாக இருந்துள்ளது.
இதையடுத்து கட்டண விவரங்கள் குறித்தும் பராமரிப்புச் செலவினம் குறித்தும் தகவல் பெற வேண்டி, அந்நான்கு நிறுனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கேட்ட தகவல்களைத் தர அவற்றுக்கு 4 வேலை நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து விலைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.