கோலாலம்பூர், மார்ச் 8- மலேசிய இந்தியர்களின் தாய்கட்சியான ம.இ.காவை 31 ஆண்டுகள் திறம்பட வழிநடத்திய துன் S. சாமிவேலு, ஒரு வரலாற்று நாயகன் என ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில், மற்றவர்கள் மெச்சும் அளவுக்கு இந்திய சமுதாயத்தை வழி நடத்திச் சென்றவர் அவரென, விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இன்று மார்ச் 8, சாமிவேலுவின் பிறந்தநாளில் அப்பெருந்தலைவரை விக்னேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.
“கடந்த காலங்களில் அவரின் பிறந்த நாளை அவருடன் ஒன்றாக இணைந்து கொண்டாடிய நாம் இன்று அவர் நம்மிடையே இல்லாத சூழ்நிலையில் சோகத்துடன் அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளோம்” என்றார் அவர்.
தனது கல்வி முன்னேற்றத்திற்கும் துன் பெருமளவில் துணை நின்றதை நினைவுக் கூர்ந்த விக்னேஸ்வரன், இளம் வயதில் தான் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டியபோது அரசியல் குருவாக இருந்து தம்மை சாமிவேலு செவ்வனே வழிநடத்தியதாக நன்றியுடன் தெரிவித்தார்.
“ நம் இந்திய சமுதாயமும் சொந்தக் காலில் நின்று பல்கலைக்கழக உயர் கல்வி பெறவும், நிதிச் சிக்கலால் நம் சமுதாய மாணவர்களின் கல்வி தடைபட்டு விடாமல் தொடர்வதற்கும், துன் அவர்கள் அமைத்துத் தந்த MIED, Aimst பல்கலைக் கழகம் ஆகியவைதான் நமக்கு இன்று முக்கிய நிதி ஆதாரங்களாகத் திகழ்கின்றன” என விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
மலேசிய அரசியல் அரங்கில் சிங்கமாய் வலம் வந்த துன் சாமிவேலு 2022-ஆம் ஆண்டு தனது 86-வது வயதில் காலமானார்.