சுபாங் ஜெயா, டிச 7 – காந்தியான் பெக்கர்ஜா ‘Gantian Pekerja’ எனப்படும் மாற்றுத் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
முறையான பெர்மிட்டுடன் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களின் தவணைக் காலம் முடிவடைவதற்கு முன் அவர்கள் தாயகத்திற்கு திரும்பினால் முதலாளிகளுக்கு அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இதற்கு முன் மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவரான சுரேஸ் கோவிந்தசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை நியாயமான இருப்பதால் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிவக்குமார் கூறினார்.
குறிப்பாக பத்து அந்நிய தொழிலாளர்களை கொண்டுள்ள உணவகங்களில் ஐந்து தொழிலாளர்கள் சொந்த பிரச்சனைகளால் நாடு திரும்ப நேரிட்டால் முதலாளிகள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையில் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள மனிதவள அமைச்சு உதவி புரியவேண்டும் என சுரேஸ் வைத்துள்ள கோரிக்கை ஏற்புடையதாக இருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மனிதவள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பேச்சு நடத்தப்படும் என அவர் கூறினார். மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் 23-ஆம் ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.