கோத்தா கினபாலு, ஜனவரி 8 – சபா, கோத்தா கினபாலுவிலுள்ள, மலேசிய சபா பல்கலைக்கழகத்திற்கு, முதல் முறையாக வருகை மேற்கொண்ட புதிய உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிருக்கு, அங்குள்ள மாணவர்கள் பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.
வழக்கமான வரவேற்புக்கு பதிலாக, தண்ணீர் பிரச்சனையை பொருத்துக் கொண்டு படிக்க வேண்டிய அவல நிலையை தெளிவுப்படுத்தும் வகையில், மாணவர்கள் அந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அதே சமயம், அமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், குளித்து விட்டு வராததற்கு மன்னிப்புக் கேட்கும் வகையில் அவர்கள் பாடல் ஒன்றையும் பாடினார்கள்.
உயர்கல்வி துணையமைச்சர் முஸ்தபா சக்முட், மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டத்தோ காசிம் மன்சோர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பல்கலைக்கழகத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுக் காணும் வகையில், மாநில நீர்வளத் துறையின் “டேங்கர்கள்” வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவை போதுமானதாக இல்லை.
அதனால், அம்மாணவர்கள் எதிர்நோக்கி இருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வுக் காண, கூடுதலாக இருபது லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜம்ரி அறிவித்தார்.
சபா மாநில நீர் நெருக்கடிக்கு தீர்வுக் காண 30 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்தாண்டு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.