
வாஷிங்டன், ஏப்ரல்-27- யுக்ரேய்ன் விஷயத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உண்மையிலேயே அமைதி உடன்பாட்டை விரும்புகிறாரா என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அப்பாவி பொது மக்கள் வசிக்கும் இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகின்றனர்.
இதிலிருந்து போரை நிறுத்தும் எண்ணம் புட்டினுக்கு இல்லையென்றே தமக்குத் தோன்றுவதாக டரம்ப் கூறினார்.
இது இப்படியே போனால் புட்டினை அமெரிக்கா வேறு வழியாகக் கையாள வேண்டியிருக்கும்.
அவர் எதற்கும் மசியா விட்டால், மோஸ்கோவ் மீது பொருளாதாரத் தடை அல்லது கூடுதல் வரிகளை விதிப்பது தான் சரியான தீர்வாக இருக்குமோ? என தனது Truth Social சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
முன்னதாக, வத்திகன் சிட்டியில் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் இறுதிச் சடங்கின் போது யுக்ரேய்ன் அதிபர் வொளோடிமிர் செலன்ஸ்கியை, டிரம்ப் சிறிது நேரம் சந்தித்து பேசினார்.
பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் ‘அதிகப்பிரசங்கி’ யாக பேசியதால் டிரம்ப்பிடம் திட்டு வாங்கி வெளியேற்றப்பட்ட பிறகு, செலன்ஸ்கி டிரம்ப்பை நேரில் சந்தித்தது இதுவே முதன் முறையாகும்.
இச்சந்திப்பில் ரஷ்யாவுடன் நிபந்தனையற்ற போர் நிறுத்த உடன்பாடு பற்றி பேசியதாக செலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.
ரோமிலிருந்து வாஷிங்டன் திரும்பிய கையோடு, புட்டின் குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.
ஏற்கனவே சீனாவுடன் வரிப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இந்த யுக்ரேய்ன் விவகாரத்தைப் பயன்படுத்தி தனது பரம வைரியான ரஷ்யா மீது அடுத்து வரிகளைத் திணிக்கத் திட்டமிடுவதாகப் பேசப்படுகிறது.