ஜோர்ஜ் டவுன், நவ 29 – 2023 ஆண்டின் மூன்றாவது காலாண்டுவரை பினாங்கில் 2,947வீடுகள் அல்லது சொத்துடமைகளை விற்கமுடியவில்லையென மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ S. சுந்தரராஜு தெரிவித்தார். இவற்றில் 17 விழுக்காடு வீடுகள் 300,000 ரிங்கிட்டுக்கும் குறைந்த விலையில் உள்ள வீடுகளாகும். வீடுகள் வாங்குவோருக்கான கடன் வசதி கிடைக்காததால் அவற்றை விற்க முடியவில்லையென மாநில சட்டமன்ற கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
பினாங்கில் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் கடப்பாட்டில் மாநில அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை வழங்கி வருவதாக சுந்தரராஜு கூறினார். பினாங்கு மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை மற்றும் 2030 ஆம் ஆண்டு பினாங்கு பெரும்திட்ட இலக்கின்படி வீடமைப்பு விவகாரத்தில் மாநில அரசாங்கம் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூர் மக்களின் தேவைகளை கவனத்திற்கொண்டு வீடமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் தொடந்து கவனம் செலுத்துவரும் . RMM எனப்படும் வாங்கக்கூடிய விலையிலான வீடுகளை நிர்மாணிப்பதில் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும். இந்த வகை வீடுகளை நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங்கம் நிதியை தயார்படுத்த வேண்டியிருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.