கோலாலம்பூர் நவ 25 – முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் தலைமையிலான் “உரிமை” எனும் அரசியல் கட்சியின் அறிமுக விழாவிற்கான இடம் மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்பு அறிவிக்கப்பட்டது போன்றே அதே நேரத்தில், அதாவது நாளை மாலை 4 மணிக்கு புதிய இடமான கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் என பேராசிரியர் ராமசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்திருக்கிறார்.
முன்பு பிரிக்பீல்ட்ஸிலுள்ள டெம்பள் ஒப் பைன் ஆர்ட்ஸ் (Temple of Fine Arts) கட்டிடத்தில் நடைப்பெறவிருந்த நிலையில் போலிசிடமிருந்து வந்த அழுத்ததினால் கட்டிட நிர்வாகத்தினர் இறுதி நேரத்தில் இடத்தை ரத்து செய்துவிட்டதாக ராமசாமி கூறினார்.
இந்திய சமூகத்தில் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தற்போதைய அரசாங்கம் இந்த அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறதா எனும் கேள்வியையும் அவர் எழுப்பி இருக்கிறார்.
ஜனநாயக அடிப்படையில் அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தங்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக கூறிய அவர், தங்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என ராமசாமி கூறினார்.