கூலிம், மார்ச் 9 – கெடா, கூலிமில் புதிதாக வாங்கிய காருக்குத் திருஷ்டி கழிக்க தேங்காய் மற்றும் எலுமிச்சை கனிகளை தானே ஏற்பாடு செய்து, ஓர் இந்தியக் குடும்பத்தை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மலாய்க்கார சகோதரியான விற்பனைப் பெண்.
கூலிமில் உள்ள புரோட்டோன் கார் விற்பனை மையமொன்றில் தான் அச்சம்பவம் நடந்திருக்கிறது.
வழக்கமாக குடும்பத்தினர் தான் அந்த திருஷ்டி கழிக்கும் சாங்கியத்துக்கான பொருட்களை வாங்கி எடுத்து வருவர்.
ஆனால் Eira Proton என்றழைக்கப்படும் அந்த புரோட்டோ கார் விற்பனைப் பெண், தனது வாடிக்கையாளருக்குச் சிரமம் ஏதும் தராமல் முன்னேற்பாடாக தானே களத்தில் இறங்கி விட்டார்.
ஆசையோடு வாங்கியக் காரை எடுத்துச் செல்ல வந்த குடும்பத்திடம், தேங்காய்-எலுமிச்சை தட்டை நீட்டி அவர்களை Eira திக்கு முக்காட வைத்துள்ளார்.
அதனைச் சற்றும் எதிர்பார்க்காத அக்குடும்பம், மகிழ்ச்சியோடு தட்டை வாங்கி அங்கேயே காருக்கு திருஷ்டி கழித்தது.
Eira பார்க்க ஆசைப்பட்டது போலவே, எலுமிச்சை கனிகளை கார் டையர்களின் அடியில் நாலா புறமும் வைக்க, வீட்டுக்குப் பெரியவரான மூதாட்டி தேங்காயை உடைத்தார்.
புதியக் காருக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக நம்மவர் மத்தியில் காலங்காலமாக இருக்கும் நம்பிக்கையை மதித்து, அதற்கான ஏற்பாட்டோடு வந்த மலாய் சகோதரியின் செயல் கண்டு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு Eira-வும் ஓர் எடுத்துக்காட்டு என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Eira தனது Tik Tik பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ Likes-களை அள்ளி வருகிறது.