கோலாலம்பூர், ஜன 3 – 13 வயது சிறுமியை கற்பழித்த பின் அச்சிறுமியை திரெங்கானுவிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு அருகே விட்டுச் சென்ற சந்தேகப் பேர்வழியான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டான். திரெங்கானு பெசுட்டிலுள்ள ஒரு வீட்டிலிருந்து அச்சிறுமியை அந்த சந்தேகப் பேர்வழி புத்தாண்டு தினத்தன்று அழைத்துச் சென்றுள்ளான். அதன் பிறகு கிளந்தான் பாசிர் புதேவுக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞன் அங்குள்ள வயலில் அச்சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான். நேற்று காலை மணி 6.50 அளவில் அந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த இளைஞன் பகாங், பென்தோங்கில் கைது செய்யப்பட்டதாக பாசிர் புதே மாவட்ட போலீஸ் தலைவர் சாய்சூல் ரிசால் சகரியா தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழி கோலாலம்பூருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தாக அவர் கூறினார். கற்பழிப்பு குற்றம் தொடர்பான விசாரணைக்காக அந்த இளைஞன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.