
பிரம்டன் சிட்டி, மே-13 – நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக இது கட்டப்பட்டுள்ளது.
இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் தாம் பெருமிதத்துடன் நிற்பதாக, ஒன்ராறியோ சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழ் மக்களின் வரலாற்றினையும், அவர்களின் துயர்சுமந்த நினைவின் கதைகளையும் எதிர்காலத் தலைமுறையினர் நினைவுகூற ஏதுவாக, ஒரு சக்கிவாய்ந்த அடையாளச் சின்னமாக இந்நினைவகம் எழுந்து நிற்கிறது.
2021-ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் தமிழின அழிப்பின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடத்தை இலங்கை அரசு இடித்து தரைமட்டமாக்கியது; அதற்கு பதிலடியாக பிரம்டன் மாநாகர சபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஓர் இன அழிப்பு நினைவகம் கட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக விஜய் தெரிவித்தார்.
இந்நினைவகம் அமைக்கப்பட உறுதுணையாக இருந்த கனடியத் தமிழர் தேசிய அவைக்கும், மேயர் மற்றும் கனடா முழுவதும் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அவர்களின் அசைக்க முடியாத தலைமைக்கும் விஜய் தணிகாசலம் நன்றியைத் தெரிவித்தார்.
அவர்களின் அர்ப்பணிப்பு, தமிழ் மக்களின் குரல்களும், நாம் இழந்தவர்களின் நினைவுகளும் என்றென்றும் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரின் போது, ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மே-18-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது