
குவாலா சிலாங்கூர், மே-3 – குவாலா சிலாங்கூர், தஞ்சோங் காராங்கில் உள்ள ஒரு செம்பனை எண்ணெய் ஆலையில் இன்று காலை பாய்லர் கொதிகலன் வெடித்ததில், நான்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
தொழிலாளர்கள் நீராவி கொதிகலனில் தண்ணீரை சூடாக்கும் போது ஏற்பட்ட வெடிப்பால் தீ ஏற்பட்டது.
இதையடுத்து பெஸ்தாரி ஜெயா நிலையத்திற்கு காலை 8.55 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
எனினும் தீயணைப்பு வண்டி சென்று சேருவதற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட நால்வரில் இருவர் நேப்பாளிகள், தலா ஒருவர் இந்தியப் பிரஜை மற்றும் வங்காளதேசி ஆவார்.
20 முதல் 30 வயதிலான அவர்களுக்கு கால்களில் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.
அங்கிருந்த பொது மக்கள் அந்நால்வரையும் தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்த்தனர்.