
கோலாலம்பூர், மே-5- சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ள வாழ்க்கை, கல்விப் பயில 3 கைதிகளுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.
சிவா, ஷங்கர், சுரேஷ் (உண்மைப் பெயர் அல்ல) ஆகிய மூவரும் OUM எனப்படும் மலேசியப் பொது பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் டிப்ளோமா பட்டங்களைப் பெற்று சாதித்துள்ளனர்.
காஞாங் சிறைக் கைதிகளான அம்மூவரும் நேற்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற OUM-மின் 29-ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
17 வயதில் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ், 2014-ஆம் ஆண்டில் SPM தேர்வெழுதி மிகச் சிறந்தத் தேர்ச்சியைப் பெற்றார்.
இதையடுத்து, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் முழு நிதி ஆதரவோடு OUM-மில் வர்த்தக நிர்வாகத் துறையில் படித்து இன்று அவர் டிப்ளோமா பெற்றுள்ளார்.
தற்போது அதே துறையில் இவர் இளங்கலைப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வேளையில், சிறைச்சாலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வித்தியாசமான சூழலில் கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம், சாதிக்க தனக்கு ஒரு இடையூறாக இல்லையென பூரிக்கிறார், 34 வயது ஷங்கர்.
2018 முதல் ஆயுட்கால தண்டனையை அனுபவித்து வரும் இவரும் வர்த்தக நிர்வாகத் துறையில் டிப்ளோமா பெற்றார்.
மூன்றாமவரான 36 வயது சிவா, வெளியில் விட்ட டிப்ளோமா படிப்பை சிறைச்சாலையில் முடித்து, இப்போது வர்த்தகத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
சிறைச்சாலைக்கு வந்த பிறகு இங்கும் படிக்க வாய்ப்பிருப்பதை அறிந்தேன்; குடும்பத்தாரும் ஊக்குவித்தனர்; இன்று பட்டதாரியாக நிற்கிறேன் என நெகிழ்ச்சியுடன் சிவா கூறினார்.
2010-லிருந்து 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சிவா, அடுத்து முதுகலைப் பட்டப்படிப்பையும் தொடருகிறார்.
முந்தைய தவறுகளால் வாடி போகாமல், கல்வியில் சாதித்துள்ள இம்மூவரும் நம் அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டே.
இது அம்மூவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைய நாமும் வாழ்த்துவோமே!