
ஈப்போ, மே-5, ஈப்போ, பாசீர் பூத்தேவில் 2 மாடி பங்களா வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், 2 பெண்கள் உட்பட 12 சீன பிரஜைகள் கைதாகினர்.
இதையடுத்து சீனாவைச் சேர்ந்த வேலை வாய்ப்பு மோசடி கும்பல் முறியடிக்கப்பட்டது.
25 முதல் 44 வயதிலான அவர்கள், சீன பிரஜைகளைக் குறி வைத்து அவ்வீட்டை வேலை வாய்ப்பு மோசடிக்கான தொலைப்பேசி அழைப்பு மையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து அக்கும்பல் செயல்பட்டு வந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.
‘ரொக்கக் கழிவைப்’ பெற இணையத்தில் பொருட்களை வாங்க வைக்க வாடிக்கையாளர்களைத் தேடுவதே அவர்களின் வேலையாகும்.
இணையத்தில் பொருட்களை வாங்கும் ‘வேலையைக்’ கச்சிதமாக முடித்தால், ‘ரொக்கக் கழிவு’ கிடைக்குமென வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அதை நம்பி பொருட்களை வாங்கியவர்களுக்கு சொல்லியபடி ‘ரொக்கக் கழிவு’ வழங்கப்படுவதில்லை.
இப்படியாக அக்கும்பல் பணம் பறித்து வந்துள்ளதாகக் கூறிய நூர் ஹிஷாம், சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்