புதுடெல்லி, டிசம்பர் 1 – இந்தியா, உத்தர பிரதேசம் மாநிலத்தை, சேர்ந்த பெண் ஒருவர், உலகின் மிக நீளமான முடி கொண்டவர் எனும் அங்கீகாரத்தை பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெயர் பதித்துள்ளார்.
46 வயதான ஸ்மிதா ஸ்ரீவஸ்தா எனும் அப்பெண், தனது 14-வது வயதில் இருந்தே, முடி வெட்ட வேண்டும் எனும் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.
தற்போது ஸ்ரீவஸ்தா தலை முடியின் நீளம் 2.3 மீட்டர் ஆகும்.
80-களில் பிரபலமான நடிகை ஒருவரை பார்த்த, முடியை நீளமாக வளர்க்க வேண்டுமென தமக்கு ஆசை வந்ததாகவும் ஸ்ரீவஸ்தா தெரிவித்துள்ளார்.
வாரத்தில் இருமுறை மட்டுமே தனது நீண்ட தலைமுடியை கழுவும் ஸ்ரீவஸ்தா, அதற்காக ஒவ்வொரு தடவையும் சுமார் மூன்று மணி நேரத்தை செலவிடுகிறார்.
“இந்திய கலாச்சாரத்தில், தெய்வங்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை நீளமாக வைத்திருக்கின்றனர். அதே சமயம், நமது பாரம்பரியப்படி முடி வெட்டுவது ” சுபமானது” அல்ல. உண்மையில், நீண்ட கூந்தல் பெண்களின் அழகை அதிகரிக்க செய்கிறது” என்கிறார் ஸ்ரீவஸ்தா.
வெளியில் சென்றால், இந்த நவீன காலத்திலும் இவ்வளவு நீளமான தலை முடியை கொண்ட பெண்ணா? என தம்மை பார்த்து அனைவரும் வியப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஸ்ரீவஸ்தா கூறியுள்ளார்.