
தெலுக் இந்தான், அக்டோபர்-5,
“மடானி அனைவருக்குமானது” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங், தீபாவளியை முன்னிட்டு 12 தமிழ்ப் பள்ளிகள் மற்றும் 258 இந்திய மாணவர்களுக்கு மொத்தம் RM1.49 மில்லியன் மதிப்பிலான “Kasih MADANI” உதவி நிதியை வழங்கினார்.
தெலுக் இந்தான் வரலாற்றிலேயே இது தான் மிக உயர்ந்த தொகையாகும்.
இந்த உதவி மடானி அரசின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
எந்த மாணவரும் பொருளாதார சிக்கலால் கல்வியில் பின்தங்கக்கூடாது என்பதே இதன் நோக்கம் என்றார் அவர்.
அந்நிதியில் RM1.23 மில்லியன் 12 தமிழ்ப் பள்ளிகளின் வசதிக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.
RM256,600 ரிங்கிட், கல்வி உதவியாக வழங்கப்பட்டது; அதாவது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு RM1,000, இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு RM1,200, மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு RM2,000 வழங்கப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி கூறி வரும் “மலாய் குழந்தைகள் நமது குழந்தைகள், சீன குழந்தைகள் நமது குழந்தைகள், இந்திய குழந்தைகள் நமது குழந்தைகள்” என்ற வாசகம் வெறும் கோஷமல்ல…அது அனைவரையும் அரவணைக்கும் பரிவுமிக்க மற்றும் அன்புள்ளம் கொண்ட மடானி அரசின் கொள்கை என ஙா கோர் மிங் கூறினார்.
ஒரு வலிமையான நாடு உருவாக கை சுத்தமான அரசாங்கம், நியாயமான கொள்கைகள் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை அவசியம் என்றார் அவர்.